கிறிஸ்துமஸ் காலம் - கைவினை

இதையும் அதையும் துடைத்து
இதையும் அதையும் குறித்து

பச்சை மரத்தில் தொங்கவிட
பதமாய் வீட்டில் ஆபரணம் செய்து

பனி வேண்டும் இங்கே என்று
பனித் துளிகள் செய்தோம் காகிதத்தில்


முன்னாடியே செய்வது எது
முதல்நாள் செய்வது எது

நானாகச் செய்வது எது
நான் பெற்றவர்  செய்வது எது

குடில் வைப்பது எங்கே
குழந்தைகள் விளையாடுவது எங்கே

இதைச் செய்து விட்டோமே
இன்னும் எதைச் செய்யலாம்

இப்படிப் பல திட்டங்கள்
இப்படிப் பல கிளர்ச்சிகள்

இனிதாக வருகிறது அருகில் ஒரு தினம்
இன்பம் தரும் கிறிஸ்து பிறப்பு தினம்



உணர்வு நாடுவது தமிழன்றோ

திகட்டும் தித்திக்கும் வகையான இனிப்புகளே
திகட்டாத்  தித்திப்பு எம்  தமிழன்றோ

திருநாள் இன்பமா தமிழ் தரும் இன்பம்
ஒருநாளும் குறையா நிலையான  இன்பமன்றோ

எத்துணைப் பாடல்கள் செவி விழுந்தாலும்
எண்ணமெல்லாம் சிலிர்ப்பது தமிழ்ப் பாடலன்றோ

எம்மொழிப் புத்தகங்கள் தேடித் படித்தாலும்
எம்மொழி தமிழ் படிக்க உள்ளம் ஏங்குமன்றோ

அன்பு நிறைந்த பிற மொழி உரையாடலினும்
என் உள்ளம் உகளுவது தமிழ்ப் பேச்சன்றோ

எங்கு  சுற்றினும் தாய் சேரும் சேய் போல்
எம்மொழி கற்றினும் உணர்வு நாடுவது தமிழன்றோ


பேசுவது தமிழா - 1

"தமிழுக்கும் அமுதென்று பேர்"...
தமிழுக்கு எதற்கு வடசொல்லில் பெயர்? ஆச்சரியமாக இருக்கிறதா?  இந்தப் பாடல் இயற்றிய கவிஞர் பாரதிதாசனை மிகவும் மதிக்கிறேன், எனக்குப் பிடித்த கவிஞரும் ஆவார். இந்தப் பாடலும் பிடித்தமானது தான். நான் இங்கு சொல்வது பாடலைப் பற்றி அல்ல, வடமொழிச் சொல் பற்றி மட்டுமே.
தமிழில் கலந்திருக்கும் வடமொழிச் சொற்கள் இன்று நேற்றல்ல, கடைச்சங்க காலத்தில் இருந்தே கலக்கத் தொடங்கிவிட்டன. தமிழ் மேல் உள்ள காதலால் இரண்டற இணைகின்றன வடமொழிச் சொற்கள் என்று கொள்ளலாமோ? அப்படிக் கலந்த வடமொழிச் சொற்களையும் அதற்கு இணையானத் தமிழ் சொற்களையும் பகிர்வதே என் நோக்கம்.

அமுது என்பது வடமொழியாம்
அதனிடத்தில் வருமாம்
அழகுத் தமிழ் சொற்கள்
அடிசில், இனிமை, சோறு


பேசுவது தமிழாவில் மீண்டும் பேசுகிறேன். அதுவரை அடிசில் உண்டு, இனிமையாக இருங்கள்.


இருப்பதும் இல்லாததும்

தொலைவில் பார்த்தேன் ஒற்றை நட்சத்திரம்
தொலைநோக்கியில் பார்த்தால் கூட்டமாய்
இல்லை என்றே எண்ணுவது
இல்லை உண்மை, அறிவீரே
வெறுமை என்று நினைப்பதும்
நிறைவளியாய் இருக்கலாம் உணர்வீரே

இருப்பதாய்த் தோன்றும் வானம்
இருப்பதில்லைத் தொடவேப் போனால்
உண்டு என்று உள்ளுவதும்
உண்மை இல்லை, அறிவீரே
நிறைவு என்று நினைப்பதும்
வெறுவெளியாய் இருக்கலாம் உணர்வீரே

இருப்பதும் இல்லாததும் தோற்றமயக்கம்
இரண்டிலும் மகிழ்வதே வாழ்க்கைப்பாடம்


உள்ளுவதும் - நினைப்பதும்
வெறுவெளி - வெறுமை
வளி - காற்று 

தெளிவான வானத்தில் ஒரு நட்சத்திரம் தெரிந்தது. தொலைநோக்கியில் அதனைக் குவிமையமாய்  (focus) வைத்துப்  பார்த்தால் கூட்டமாய்  நட்சத்திரங்கள். அப்பொழுது எனக்குத் தோன்றியதே இக்கவிதையாய்  உருவெடுத்தது. தத்துவமாய் போரடிக்கவில்லை என்ற நம்பிக்கையில் பதிவு செய்கிறேன். :)

ஐங்குறுநூறு 16- மையிட்டும் மஞ்சளாய்

ஐங்குறுநூறு 16, ஓரம்போகியார் 
மருதம் திணை - தோழி தூது வந்த பாணனிடம் சொன்னது
"ஓங்கு பூ வேழத்துத் தூம்பு உடைத் திரள் கால்
சிறு தொழு மகளிர் அஞ்சனம் பெய்யும்
பூக்கஞல் ஊரனை யுள்ளிப்
பூப் போல் உண்கண் பொன் போர்த்தனவே"


எளிய உரை: ஓங்கி வளரும் பூக்களை உடைய நாணல் செடிகளின் உள்ளே வெறுமையாய்க் குழல் போல் இருக்கும் தடித்தக் காம்பினுள்ளே வேலை செய்யும் பெண்கள் கண்மையை வைத்திருக்கும் பூக்கள் நிறைந்ததுமான ஊரைச் சேர்ந்தவனை எண்ணி பூப்போன்ற மையிட்டக் கண்கள் பொன்னைப் போல மஞ்சள் நிறம் போர்த்தனவே.


விளக்கம்: நாணல் செடியின் தடித்தக் காம்பு உள்ளே வெறும் குழலாய்த் திடமின்றி இருந்தது போல தலைவனும் தலைவியின் மேல்கொண்டக் காதலில் திடமில்லாமல் போனானே என்று தோழி வருந்துகிறாள். பிற பெண்களிடம் சென்ற தலைவனின் செயலால் வருந்தி அவனையே எண்ணிய தலைவியின் மலர்போன்ற மையிட்டக் கண்கள் பொன்னைப் போல் மஞ்சள் நிறம் கொண்டதே, இப்படித் தலைவியை தலைவன் வருத்திவிட்டானே என்று சினமுற்றத் தோழி தலைவியைப் பார்க்க முடியாது என்று தூதுவந்த பாணனிடம் சொல்கிறாள்.
 

சொற்பொருள்: ஓங்கு பூ வேழத்து - உயர்ந்து வளரும் பூக்களை உடைய நாணல், தூம்பு உடைத் திரள் கால் - உள்ளே வெறுமையாய் உள்ள தடித்த காம்பு, சிறு தொழு மகளிர் - வேலைசெய்யும் பெண்கள், அஞ்சனம் பெய்யும் - கண்மை வைக்கும், பூக்கஞல் - பூக்கள் நிறைந்த, ஊரனை - ஊரைச் சேர்ந்தவனை, யுள்ளி - எண்ணி, பூப்போல் - பூவைப் போன்ற, உண்கண் - மையிட்ட கண், பொன் போர்த்தனவே - பொன்னைப் போல மஞ்சள் நிறம் ஆகினவே 

என் பாடல்:
"உயர்ந்து பூத்த நாணலின் உள்ளீடற்றத்
தண்டினுள் கண்மை வைக்கும் பெண்கள்
உள்ளம் உடைத்தத் தலைவனின் செயலால்
கண்மையிட்டும் மஞ்சளாய்த் தலைவியின் கண்கள்"

வானவில்லாய்

என் மகனின் கைவண்ணம்

மழைத் துளி ஏற்காத
அலை வரிசையே
அழகு வண்ணமாய்...

ஒளிந்த மழையதன் பின்னே
ஒளிவீசும் பொன் கதிரால்
ஒளிருமே வண்ண வானவில்

துளிகள் தள்ளும் அலைவரிசைகள்
வெளி வரும் ஏழு  வண்ணங்கள்
ஒளிருமே வானில் வானவில்லாய்

துன்பம் தள்ளும் வேளையிலே
தன் நிலை குலையாமல் மிளிர்ந்திட்டால்
பின் வருமே ஒளிவீசும் வெற்றி!


இங்கேயுமா கள்ளநோட்டு - தொடர்ச்சி

தானியங்கி வங்கி இயந்திரத்திலும் கள்ளநோட்டு வருவதைப் பற்றியப் பதிவு இங்கேயுமா கள்ளநோட்டு? அதன் தொடர்ச்சியாகக் கள்ளநோட்டை நல்லநோட்டிலிருந்துப்  பிரித்துப் பார்ப்பது எப்படி என்று இந்தப் பதிவு.


நல்ல நோட்டைக் குறிக்கும் குறியீடுகள்:
1. இடது மேல் பக்கத்தில் ஒரு புள்ளிக்கு மேலே 500 என்பதற்கான ஒரு அச்சு.
2. இடது கீழ்ப் பக்கத்தில் புள்ளிக்குக் கீழே  வெளிச்சத்தில் பார்த்தால் தெரியும் 500.
3. நோட்டின் பின்புறம் கீழ்ப் பகுதியில் நடுவில் நோட்டு அச்சடிக்கப்பட்ட வருடம் அச்சடிக்கப்பட்டிருக்கும்..

கள்ள நோட்டில் மேலே சொன்ன மூன்று குறியீடுகளும் இருக்காது. மேலும் வலது பக்கம் ஒரு வெள்ளி கோடு தெரிந்தால் நல்ல நோட்டு என்று கேட்டிருக்கிறோம். ஆனால் இப்பொழுது அக்கோடு கள்ளநோட்டிலும் இருக்கிறதாம்.

இந்தக் குறிப்புகள் கள்ளநோட்டைக் கண்டுகொள்ள அனைவருக்கும் பயன்படலாம் என்று பதிவிடுகிறேன். தெளிவாக சொல்லியிருக்கிறேனா என்று தெரியவில்லை. சந்தேகம் இருந்தால் கேட்கவும்.
தூயதோர் சமுதாயம் அமைய வழிசெய்வோம்! நன்றி!

நல்ல நோட்டையும் கள்ள நோட்டையும் படம் எடுத்து குறியீடுகளைக் குறித்துக் கொடுத்த என் கணவருக்கு நன்றி!

இங்கேயுமா கள்ளநோட்டு?

எங்கேயும் களவு
அயர்ச்சி!

இங்கேயுமா?
அதிர்ச்சி!

அனுபவத்தைப் பகிர்கிறேன்
அலுக்காமல் கேட்பீர்

அறிந்து கொள்வீர்
அறிந்தவரிடம் பகிர்வீர்

தானியக்க வங்கி இயந்திரம் (ATM)
தானாய் பண நோட்டைத் தள்ளும்

தருமோ கள்ளநோட்டு?
தருகிறதேப்  புரட்டுநோட்டு!

அங்கேயே சரிபார்ப்பீர்
அல்லலைத்  தவிர்ப்பீர்

கள்ளநோட்டு கண்டால்
பாதுகாவலரிடம் தெரிவிப்பீர்

வங்கிக்குச் சென்று  உரைப்பீர்
மாற்றுநோட்டு வாங்கிக்கொள்வீர்

எங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தினாலும், நண்பர்கள் மற்றும் கடைக்காரர்கள் மூலமாகவும்  பெங்களூரில் இது பரவலாக நடக்கிறது என்று கேள்விப்படுகிறேன். பிற நகரங்கள் பற்றித் தெரியவில்லை, ஆனாலும் எங்கும் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது.

வங்கிக்கு வரும் பணத்தைப் பரிசீலனை செய்தபிறகே வெளிச்சுற்றுக்கு விட வேண்டும் என்று ரிசெர்வ் வங்கியின் உத்தரவையும்  மேலும் சில தகவல்களையும் இந்த இணைப்பில் பாருங்கள்! அவை நடைமுறைப்படுத்தப் படுகிறதா என்று தெரியவில்லை.



பள்ளி இருக்கே தள்ளி - குழந்தைகள் சந்திக்கும் பிரச்சினைகள் - 2

குழந்தைகள் சந்திக்கும் பிரச்சினைகள் குறித்து ஒரு அலசல், அவற்றைப் பகிர்தலின் மூலம் கிடைக்கும் வெவ்வேறு அனுபவங்கள் மற்றும் தீர்வுகள் - அதனை மனதில் கொண்டு பூந்தளிர் தளத்தில் துவங்கியதுதான் குழந்தைகள் சந்திக்கும் பிரச்சினைகள் தொடர் பதிவுகள். அந்த வரிசையில்நான் எழுதியுள்ள பள்ளி இருக்கே தள்ளி  பதிவைப் படித்து உங்கள் கருத்துகளைப் பதிவு செய்ய வேண்டுகிறேன். நன்றி!

குழம்பின மேகங்கள்

தீபாவளித் திருநாள்
திக்கு எட்டு  எங்கிலும் 
திணற வைத்த ஒளியும் ஒலியும்

என்ன இது ஒளி
என்ன இது ஒலி
எண்ணினவோ மேகங்கள்

ஒருவரோடொருவர் இடிக்கவில்லையே
ஒலியும் ஒளியும் எங்ஙனம்
ஒன்றாகக் குழம்பின மேகங்கள்

மெய்க் கண்டறிய ஆவலுடன்
மெல்லச் சென்றுப் பார்க்கவே
மென்மழையைத் தூதனுப்பின

மழைத் துளிகள் கண்டவுடன்
மனிதர் கொண்டேச்  சென்றனர்
மறக்காமல் வெடிகளை உள்ளே 

குழப்பம் தீர விடைகாணாமல்
குழம்பிய மழையும் நின்றதே
குழாமாய் மேகங்களும் நகர்ந்தனவே

பட்டாசுக் கோலங்களையும்
பஞ்சு பொதிகள்  நகர்வதையும்
பலகணியில் நின்றேக் கண்டேன் நானே!

ஐங்குறுநூறு 15 - ஊரன் அல்லனே செயலால்

ஐங்குறுநூறு 15, பாடியவர் ஓரம்போகியார்
மருதம் திணை - தலைவி தோழியிடம் சொன்னது

"மணல் ஆடு மலிர் நிறை விரும்பிய ஒண் தழைப்
புனல் ஆடு மகளிர்க்குப் புணர் துணை உதவும்
வேழ மூதூர் ஊரன்
ஊரன் ஆயினும் ஊரன் அல்லனே"


எளிய உரை: நீர் நிறைந்து மணல்  கரைகளில் ஓடும் ஆற்றில் சிவந்த இலைகளால் ஆன உடை அணிந்து விளையாடும் பெண்களை விரும்பி அவர்களுக்கு மிதவைப்போல உதவும் நாணல் வளரும் ஊரைச்சேர்ந்தவன் இவ்வூரைச் சேர்ந்தவன் ஆயினும் இவ்வூரைச் சேர்ந்தவன் இல்லையே.

விளக்கம்: வேழத்தால் ஆன மிதவைகளை ஆற்றில் விளையாடும் பெண்கள் பயன்படுத்துவர். அது அப்பெண்களுக்கு உதவுவதைப்போலத் தலைவனும் அவர்களுக்கு உதவி செய்வதாக அவர்களுடன் விளையாடுகிறான். தலைவன் பரத்தைப் பெண்களுடன் தொடர்பு கொண்டதால் வருந்திய தலைவி அவனை நம்புவதில் பயனில்லை என்று பொருள்படத் தோழியிடம் வருந்துகிறாள். என் தலைவன் ஆனாலும் பரத்தைப் பெண்களுடன் சென்று விட்டானே..அவனை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று வெதும்புகிறாள்.

சொற்பொருள்: மணல் ஆடு - மணற்கரைகளில் ஓடும், மலிர் நிறை - நிறைந்த ஆறு, விரும்பிய - விருப்பப்பட்ட,  ஒண் தழைப் புனல் ஆடு மகளிற்கு - சிவந்த இலைகளால் ஆன உடை அணிந்து ஆற்றில் விளையாடும் பெண்களுக்கு, புணர் துணை உதவும் - மிதக்கும் நாணல் போல உதவும், வேழ - கரும்பு, மூதூர் ஊரன் - பழமையான ஊரைச் சேர்ந்தவன், ஊரன் ஆயினும் - ஊரைச் சேர்ந்தவன் ஆயினும், ஊரன் அல்லனே - என் ஊரைச் சேர்ந்தவன் இல்லையே 

என் பாடல்:
கரை புரண்டு ஓடும் ஆற்றில் விளையாடும் 
இலையுடை அணிந்த பெண்களை விரும்பி
நாணல் மிதவைப் போல உடன் ஆடும் தலைவன்
இந்த ஊரைச் சேர்ந்தவன் ஆயினும்  செயலால்
இந்த ஊரைச் சார்ந்தவன் இல்லை தோழி!

என்னை நானாகவே

மலரென்றும் நிலவென்றும்
மானென்றும் தேனென்றும்
மயக்கச் சொல்ல வேண்டாம்

கண்ணென்றும் விண்ணென்றும்
கவியென்றும் புவியென்றும்
கடமையாய்ச் சொல்ல வேண்டாம்

உயிரென்றும் உள்ளமென்றும்
உளறலாய் அல்லாமல் என்பெயரை
உரியவள் என்றுணர்ந்தேச் சொல்போதும்

என்னை ஏதோவாக உருவகிக்க வேண்டாம்
என்னை உவமையில்  புகழ வேண்டாம்
என்னை நானாகவே  விரும்பிடுவாய்

தீபாவளி நல் வாழ்த்துகள்!


குடும்ப நண்பர்களுடன் அரட்டை அடித்து
கைகளில் மருதாணிக் கோலம் வரைந்து
அதிகாலையில் யாருக்கு அதிகம் சிவந்திருக்கிறது என்று ஆராய்ந்து 
ஒன்றாய் வாசலில் பல வண்ணக் கோலம் வரைந்து
குளித்து அலங்கரித்து மதுரை மல்லி சூடி 
வாழ்த்துகள் பரிமாறிப் பலகாரம் உண்டு
மத்தாப்பும் பூச்சாடியும் வைத்து மகிழ்ந்து 
தொலைபேசிக்கு ஓய்வு கொடுக்காமல் 
அனைவருக்கும் அழைத்து வாழ்த்துச் சொல்லி 
அன்பானவர்களின் இனிய விருந்துடன் உள்ளம் மகிழ்ந்து
இன்று பல ஊர்களில் வாழும் அண்டைத்
தோழிகள் வீடு வீடாய் குழு பெயர்ந்து 
தொலைக்காட்சியில் பட்டிமன்றமும் புதுப் பாடல்களும் பார்த்து
உருட்டிய லட்டையும் முறுக்கிய முறுக்கையும் நொறுக்கி 
உடைகளையும் நிகழ்ச்சிகளையும் விமர்சனம் செய்து 
இனிமையாகக் கழிந்த தீபாவளித் தினங்களின்
இனிய நினைவுகளுடன்
......
தீபாவளி நல் வாழ்த்துகள்!


வாழ்த்து அட்டையில் உள்ள இந்தப் படம்  என் சிறிய மகன் இரண்டரை வயதாய் இருந்தபொழுது
நானும் அவனும் செய்தது. நடுவில் ஒரு இலை வைத்துச் சுற்றிலும் பல்துலக்கும் தூரிகையால் வண்ணக்கலவையைத் தெளித்துச் செய்தது.




இனிக்கும் பண்டிகை உன்னுடனே

நான் செய்தது

எண்கோவை காஞ்சி வேண்டாம் அன்பே 
உன்தோளில் சாஞ்சி காப்பியம் படைக்கணும்

ஏழுகோவை மேகலை வேண்டாம் அன்பே
எழுகின்ற காலை உன்முகமேப் பார்க்கணும்

பொன் மதலிகை வேண்டாம் அன்பே
உன் மனமாளிகைப்  பொன்னாய் நானிருக்கணும் 

காதாடும் குண்டலம் வேண்டாம் அன்பே
காத்து மண்டலம் நம் அன்பால் நிறையணும்

குலுங்கும் வளையல் வேண்டாம் அன்பே
சிலுசிலுக்கும் தென்றல் உன்பெயர் சொல்லணும்

கால் சிணுங்கும் சிலம்பு வேண்டாம் அன்பே
காலமெல்லாம் உன்னன்பு என்னைச் சுற்றணும் 

மினுக்கும் கண்டிகையும் வேண்டாம் அன்பே
இனிக்கும் பண்டிகை உன்னுடனே வேண்டும்

பெண்கள் பயன்படுத்திய அணிகலன்களின் பெயர்களை வைத்து இக்கவிதை எழுதினேன்.
எண்கோவை காஞ்சி - எட்டு மணிகளால் செய்த இடையில் அணியும் அணிகலன்
ஏழுகோவை மேகலை - ஏழு மணிகளால் செய்த இடையில் அணியும் அணிகலன்
மதலிகை, கண்டிகை  - கழுத்தில் அணிவது
குண்டலம் - காதில் அணிவது
சிலம்பு - காலில் அணிவது
வளையல் - கையில் அணிவது

பெண்கள் அனைவரும் இக்கவிதையில் உள்ளது போலச் சொல்லிவிட்டால் தங்கம் விலை ஏறாது, ஏறினாலும் பாதிக்காது ;-).
பெண்களே அடிக்க வந்துடாதீங்க....என் பணி சொற்களைப் பகிர்வதே... :-)

இயலாது என்றே இயம்பிடுவீரே!

பிழை அதனைப் பொறுத்துப்
பிழைத்துப் போ என்றிடலாம்

தவறு அதனைத் தாங்கி
திருத்து என்றே உரைத்திடலாம்

ஆனால் இதனைக் கேட்பீர்
ஆன்றோரே

கடமை தவறிச் செய்யும்
மாயை

ஏமாற்றிச் சூழ்ச்சி செய்யும் 
படிறு

நம்ப வைத்துப் பேசும்
நடலை

இச்சை வழியில் சொல்லும்
மிச்சை

வாய் கூசாமல் சொல்லும்
பொய்

இவற்றை
எந்த வடிவத்திலும் 
எந்தச் சூழலிலும்
எந்தத் தன்மையிலும்

ஏற்கலாகுமோ?
பொறுத்தலாகுமோ?

இயலாது என்றே
இயம்பிடுவீரே!

மாயை, படிறு, நடலை, மிச்சை இவையெல்லாம் 'பொய்' என்பதன் வேறு பெயர்களாம். 'காந்தளூர் வசந்தகுமாரன் கதை' என்ற சுஜாதா அவர்களின் நூலில் நான் படித்தச் சொற்கள் இவை.



இதுவன்றோ காதல்

எனக்காக எதுவும் செய்வாயா?

தன்மானம் விட்டுக்கொடுக்கும் எதுவும் தவிர 

அதை எதிர்பார்க்கவில்லை நானும் 
அதுவே எனக்கு மகிழ்ச்சி 

எனக்கும் அப்படியே 

இதுவன்றோ புரிதல் - காதல்

ஐங்குறுநூறு 14 - தூங்குவதற்கு இனியதே

ஐங்குறுநூறு 14, பாடியவர் ஓரம்போகியார்
மருதம் திணை - தலைவி தோழியிடம் சொன்னது 


"கொடிப் பூ வேழம் தீண்டி அயல
வடுக்கொண் மாஅத்து வண் தளிர் நுடங்கும்
அணித்துறை ஊரன் மார்பே
பனித் துயில் செய்யும் இன் சாயற்றே"

எளிய உரை: வரிசையாக மலர்ந்திருக்கும் நாணல் மலர்கள் அருகிலிருக்கும் சிறிய வடு மாங்காய்களைக் கொண்டிருக்கும் மாமரத்தின் காற்றிலாடும் தண்டுக்கிளைகளைத் தீண்டும். அத்தகைய அழகிய துறைகளைக் கொண்ட ஊரைச் சேர்ந்தவனுடைய மார்பு குளுமையாய்த் தூங்குவதற்கு இனிமையானதே.

விளக்கம்: வடுமாங்காய்களைக் கொண்ட மாமரத்தின் மென்மையான கிளைகளை நாணல் செடிகளில் பூத்த மலர்கள் தீண்டியது போல தலைவனின் மார்பு மென்மையானதாகவும் குளுமையாய்த் தூங்குவதற்கு இனிமையானதாகவும் இருப்பதால் பல பெண்கள் அவனைத் தழுவுவதாக தலைவி தோழியிடம் சொல்லி வருந்துகின்றாள். நாணல் பரத்தைப் பெண்களைக் குறிக்கிறது.

சொற்பொருள்: கொடிப்பூ வேழம்  - வரிசையாக பூக்கள் பூத்த நாணல் செடிகள், தீண்டி - தொடும், அயல - அருகிலுள்ள, வடுக்கொண் மாஅத்து - வடு மாங்காய்களைக் கொண்ட மாமரம், வண் தளிர் - மெல்லியக் கிளைகள், நுடங்கும் - காற்றிலாடும், அணித்துரை ஊரன் மார்பே - அழகியத் துறைகளையுடைய ஊரைச் சேர்ந்தவனுடைய மார்பு, பனித் துயில் செய்யும் - குழுமையாய்த்  துயில் கொள்ளும், இன் சாயற்றே - இனிமையானதே 

என் பாடல்: 
வரிசையாக பூத்த நாணல் மலர்கள் 
வடுமாங்காய்க்  கொண்ட மாமரத்தின் 
மெல்லியக் காற்றிலாடும் கிளைகளைத் தீண்டும் 
அழகிய ஊரைச் சேர்ந்தவனுடைய மார்பு 
குளுமையாய்த்  தூங்குவதற்கு  இனியதே 

என்கையில் என்னவென்றே


வாழ்க்கையின் முக்கிய ஆதாரம்
வான் பொழியும் நீர்

எளிதாய்க் கிடைக்கும் சிலருக்கு
அரிதாய்க் கிடைக்கும் சிலருக்கு 

தூய்மையாய்க் கிடைக்கும் சிலருக்கு
தூய்மையற்றதாய்க் கிடைக்கும் சிலருக்கு

அழுக்கு நீரால் நோய்கொண்டு போகும்
அழுக்கில்லா பால் உயிரும் உண்டு 

கிடைக்காமலேயே போகும் உயிருமுண்டு
விடைகாணவே கடமை கொண்டுள்ளோம்

குளமும் ஏரியும் வற்ற
நிலத்தடி நீரும் சுண்ட

ஆறுகளும் காணாமல் போனால்
ஆழியும் என்ன ஆகுமோ?

வானம் எங்கிருந்து முகருமோ?
உயிர்களும் எங்ஙனம் தழைக்குமோ?

நினைக்கையில் அணுவும் அதிருதே
என்கையில் என்னவென்றே சிந்திக்குதே

சொட்டு நீரும் தேவையின்றிச் சொட்டக் கூடாதே
கொட்டும் மழைநீர் சேமிப்போம்  நிலத்துக்கே

பல் விளக்கும் போது
பல்லிழிக்கும் குழாய் எதற்கு?

தலை தேய்க்கும் பொழுது
தானாய்க் கொட்டும் பீச்சுக்குழாய் எதற்கு?

நீர்பிடிப்பில் போடும் குப்பை
உயிர்பிடிப்பில் போடும் குப்பையன்றோ?

மரங்களை வெட்டுதல் நாளைய
தலைமுறையை வெட்டும் மூடமன்றோ?

விரைவில் வளரும் மரங்கள் நட்டாலே 
வரைவில் முகில்கள் முட்டுமே

நீர் வளம் பெருக்கினாலே
நில வளம் தானாய்ப் பெருகுமே 

பங்களிப்பை நாம் உணர்ந்தாலே
பலவழியும் நமக்குப் புலப்படுமே


வரை - மலை 



வானம் தாண்டியும்



கண் காணும் காட்சி
காப்பியமாகும்

காது கேட்கும் ஒலி
கானமாகும்

உள்ளம் உணரும்  உணர்வு
கவிதையாகும்

பார்ப்பதும் பார்க்காததும்
படைப்பாகும்

கட்டுப்பாடு ஏதுமில்லை
கவர்ந்த எதுவுமாகும்

பார் முழுவதும்
பாடு பொருளாகும்

வானம் தாண்டியும்
வரையில்லா எண்ணமாகும்

ஆழியின் ஆழத்தினும்
ஆக்கும் மனது ஆழமாகும்

இருப்பதிலும் இல்லாததிலும்
உரு அமைக்கும் கலையாகும்

பாரெங்கும் பரவும்
பல்வகை படைப்புக்களாகும்

புரிந்திடவும் ரசித்திடவும்
புவியோற்கு ரசமாகும்

படைத்திடும் அனைவருக்கும்
படைப்பாற்றல் அனைத்துமாகும்

சிலையானேன்..களிப்பானேன்!


தூறல் நின்ற பின்னும்
கரு முகிலா?
சூரியன் உதித்தப் பின்னும்
ஒளிரும் முழுநிலவா?
மரம் அருகில்லாத போது
பன்னீர்ப் பூக்களா?
கண் விழித்தப் பின்னும்
கனவு தேவதையா?
வியந்து மெய்மறந்து
சிலையானேன்

"என்னம்மா வீடு ஒழுங்குசெய்தாயிற்றா?"
அம்மாவின் கேள்வியும்
"ஓரளவு அம்மா"
நிலா உதிர்த்தப் பதிலும்
நீளக் கருங்கூந்தலும்
பன்னீர்ப் பூக்கள் வரைந்த கோலமும்...
எதிர் வீடு வந்தது
கனவு தேவதையே!
அறிந்து மெய்யுணர்ந்து
களிப்பானேன்!

படம் - நன்றி இணையம்

இணைக்கும் இணையமாம்

இருவரும் இணைந்தே ஒன்றாய்
இறகுப் பேனா பிடித்தோம்
மூங்கில் நாணல் பேனாக்களிலும்
பாங்காய் மை தொட்டுத் தொட்டுப்
படைத்தோம் இன்றும் அழியாக்
காப்பியங்களும் காவியங்களும்
மைக் குடித்தப் பேனாவிலும்
படைத்தோம் கவிதைகளும் கட்டுரைகளும்

கரிப்பொருள் எழுதுகோலும்
கரையக் கரைய நம்மிடையே
கட்டவிழ்த்தே இலக்கியம் படைக்க
இணைந்து படைக்கும் இன்பத்தில்
இறுமாந்தே இருந்தப்  பொழுதில்
இடையில் நுழைந்தது தட்டச்சு
இன்னும் சேர்ந்தது கணினி
இணையாமல் தனித் தனியே
தட்டுகிறோம் தவிப்புடன் நாமே
இணைக்கும் இணையமாம் இது எப்படி?

--கட்டைவிரலும் ஆட்காட்டிவிரலும்


இறகால் தூவுதல் போல


வாளிரண்டு மோதும் தீப்பொறி அன்ன
வானில் மின்னல் மின்னாமல்
வலிய பீரங்கியின் முழக்கம் அன்ன
வானில் இடியும் முழங்காமல்

இவ்விடம் செழிக்கப் பொழியவே
இணைந்து இசைந்த மேகங்கள்
இறகால் தூவுதல் போல
இனிய மழைப் பொழிந்தனவே!

தாய் நீராட்டும் இளந்தாய் போல
தென்னையும் பூரித்து நின்றதே
தன் பச்சைக் கரங்களில் ஏந்திய நீர்
தளிர் மேனியில் மென்மையாய் இறங்கியதே!



ஐங்குறுநூறு 13 - சாமத்திலும் உறங்காத பெண்கள்

ஐங்குறுநூறு 13
பாடியவர் ஓரம்போகியார்
மருதம் திணை - தலைவி தோழியிடம் சொன்னது

"பரியுடை நன் மான் பொங்கு உளை யன்ன
வட கரை வேழம் வெண் பூப் பகரும்
தண் துறை ஊரண் பெண்டிர்
துஞ்சு ஊர் யாமத்தும் துயில் அறியலரே"

எளிய உரை: விரைவாக ஓடக்கூடிய குதிரையின் மிகுந்து வளர்ந்த பிடரியைப் போல வெண்மையான மலர்கள் பூக்கும் நாணல் செடிகள் கரையில் வளர்ந்திருக்கும் குளிர்ந்த நீர்நிலைகளை உடைய ஊரைச் சேர்ந்தவனுடைய பெண்கள் ஊர் உறங்குகின்ற சாமத்திலும் உறங்காதவரே

விளக்கம்: விரைவாகச் செல்லக்கூடிய குதிரையின் மிகுதியான வெண்  பிடரியைப் போல வெண்மையான மலர்கள் கரையில் உள்ள நாணல் செடிகளில் பூத்திருக்கின்றன. அத்தகைய குளிர்ந்த நீர்நிலைகளை உடைய ஊரைச் சேர்ந்தவனுடைய பெண்கள் ஊர் உறங்கும் சாமத்திலும் உறங்காமல் இருக்கின்றனர் என்று தலைவி தோழியிடம் சொல்கிறாள். அவன் பல பெண்களுடன் தொடர்பு கொண்டிருப்பதால் வருந்தி அப்பெண்களில் ஒருவரும் உறங்குவதில்லை என்று பொருள்படுகிறது.

சொற்பொருள்: பரியுடை நன்மான் - விரைவாகச் செல்லும் குதிரை, பொங்கு உளை - மிகுந்து வளர்ந்த  பிடரி , யன்ன - போல, வட கரை - குளிர்ந்த நீர்க்கரை, வேழம் -நாணல், வெண் பூப் பகரும் - வெண்மையான மலர்கள் பூக்கும், தண் துறை ஊரண் - குளிர்ந்த துறைகளையுடைய ஊரைச் சேர்ந்தவன், பெண்டிர் - பெண்கள், துஞ்சு ஊர் - உறங்கும் ஊர், யாமத்தும் துயில் அறியலரே - நடுநிசியிலும் உறங்காதவரே 

என் பாடல்:
விரைந்து செல்லும் குதிரையின் பிடரி போல
வடகரையில் நாணல் வெண்பூக்கள் பூக்கும்
குளிர்ந்த நீர்நிலைகள் உள்ள ஊரைச் சேர்ந்தவன்
பெண்கள் ஊர் உறங்கும் சாமத்திலும் உறங்காதவரே

உன்னிடம் வந்ததை

வானத்து நீலம்
வான் மிதக்கும் நிலா
குளிர்ந்த மோர்
குளிர்பனி மூட்டம்
இவையெனக்குப் பிடிக்குமா?
அறியேன் நான்
இவையெல்லாம் பிடிக்கும் என்றாய்
எனக்கும் என்றேன்
நொடி வீணடிக்காமல்
கேட்ட மனது அப்படியே செய்தது

என் புன்னகையும்
என் விழிகளும் 
பிடிக்கும் என்றாய்
கண்ணாடி முன் சிரித்துப் பார்க்கிறேன்
எண்ணிக்கையில்லாமல் 
கண்களை சுழற்றிச் சுழற்றிப் பார்க்கிறேன்
என்னை அறியாமல்
என்ன ஆயிற்று எனக்கென 
இதயத்தைக்  கேட்டால்
பதிலில்லை

உன்னிடம் வந்ததை 
உணர்ந்தாயா நீ?







நாம் சிரிக்கும் நாளே திருநாள்


தின்பதற்குப் பலவித இனிப்புகள்
தான்செய்வது பாதி பிறர் தருவது பாதி
திகட்ட உண்டு திளைப்பதுவாத் திருநாள்?

மானம் மறைக்கத் துணி தேடும்
மாந்தர் தம்மைக் கவனியாமல்
மயங்கிக் களிப்பதுவாத்  திருநாள்?

ஏற்கெனவே ஓட்டைப் போட்ட சாரலியத்தை (ஓசோனை)
ஏகத்துக்கும் அழித்துவிட உறுதிகொண்டு
ஏவிவிடும் ராக்கெட்டும் வெடியுமாத்  திருநாள்?

விளையாட்டுப் பருவம் தொலைத்து
வினை செய்யும் நிலையொழிந்து  சிறுவர்
விளையாடிச் சிரிக்கும் நாளே திருநாள்

வன்முறையும் வன்கொடுமையும்
வற்றிட வையகத்து வாழ்வோரெல்லாம்
வளமாய் வாழும் நாளே திருநாள்

மருந்துக்கும் உணவில்லா மாந்தர் சிலர்
குவளை உணவை மூவேளையும் பெற்றிட
நாம் சிரிக்கும் நாளே திருநாள்

நல்நெறி தழைத்து நயவஞ்சகம் வேரொழிந்து
நல்லதோர் உலகம் நயமாய் உருவாகி
நாம் சிரிக்கும் நாளே திருநாள்!


இக்கவிதை 'ரூபனின் தீபாவளிச் சிறப்புக் கவிதைப்போட்டி'க்காக நான் எழுதி அனுப்பியுள்ளது. நீங்களும் இப்போட்டியில் கலந்துகொள்ள அன்புடன் அழைக்கிறேன். கவிதை அனுப்புவதற்கான இறுதி நாள் 31-10-2013. மேலும் விவரங்களுக்கு மேலே கொடுத்துள்ள இணைப்பைப் பார்க்கவும், நன்றி!

தமிழ்கொண்டே சென்றிடுவாய்

இனியக் குரலெடுத்து இனிமையாய்
இப்புவி பிறந்திட்ட குழந்தாய்
இனிதாய் வளமாய் அன்பாய்
இனி நீயும் வளர்ந்திடுவாய்

அம்மாவின் அரவணைப்பில்
அப்பாவின் அன்பில்
அறிவும் பண்பும் கலந்தே
அமுதென வளர்ந்திடு ஆன்றோனாய்

மாதா பிதா குரு
மறக்காமல் ஏற்றிப் போற்றிடுவாய்
மண்படைத்த தெய்வமும்
மகிழ்வுறப் பின்  வணங்கிடுவாய்

அறநெறி சங்கச்சுவை பலவுண்டு
அவற்றைக் கருத்தாய் கற்றிடுவாய்
அழுத்தமாய் உள்ளத்தில் பதித்திடுவாய்
அவற்றின் வழிநடக்க உறுதிகொள்வாய்

தேவைக்குப் பிறமொழி பேசினும்
தேன்தமிழ் உயிராய்ப் பேசிடுவாய்
தேங்கிப் பழமையில் ஊறாமல்
தேயாமல் புதுவுலகில் பிணைத்திடுவாய்

செந்தமிழைச் செம்மையாய்ப் பற்றிடுவாய்
செம்மொழி நிலவிலும் பதித்திடுவாய்
செவ்வாயோ எவ்வாயோ எக்கிரகம்
சென்றினும் தமிழ்கொண்டே சென்றிடுவாய்

உப்பிட்டவரை நினைப்பாய் உள்ளளவும் என்றே

அன்பே ஆருயிரே
இன்றுன் பிறந்தநாள்
என்ன கொடுக்கவென்றே
எண்ணிச் சென்றேன் கடைவீதி

பழங்களில் இனிப்பு
பதார்த்தத்தில் இனிப்பு
பவுனில் பரவசம்
பட்டில் பிரமாதம்

பாட்டிமொழி நினைவில் வந்தே
பாங்காய் வாங்கிவந்தேன் உப்பை
உப்பிட்டவரை நினைப்பாய்
உள்ளளவும் என்றே

குழந்தைகள் சந்திக்கும் பிரச்சினைகள் - 1

பூந்தளிர் தியானா மற்றும் சித்திரக்கூடம் சந்தனமுல்லை , இவர்களுடன் நான் இணைந்து குழந்தைகள் சந்திக்கும் பிரச்சினைகளைப் பகிர்ந்துகொள்ளவும் அவற்றை சமாளிக்கும் விதங்களையும் பற்றி பதிவிட முயற்சி செய்கிறோம். அதைப் பற்றி மேலும் அறியப் பாருங்கள் இதை.  இதற்கு தியானாவிற்கே நன்றி சொல்லவேண்டும். இந்தக் குழுவில் இணைசேர விருப்பமுள்ளவர்களை விருப்பத்துடன் அழைக்கிறோம்!

இந்த டிவிய எவன்தான் கண்டுபிடிச்சானோ...
பொழுதன்னிக்கும் டிவிய பாத்துகிட்டு..
இரு இரு கேபிள்-அ கட் பண்றேன்..
பக்கத்து வீட்டுல யார் இருக்கானு கூட பார்க்க மாட்டாங்கப்பா இந்த ஊருல, டிவி மட்டும் இல்லேனா பைத்தியம் பிடிச்சுரும்..

இப்படி பலவாறாக தொலைக்காட்சிப் பற்றிய உரைகள் கேட்டிருப்போம். அதிலும் தொலைக்காட்சியும் குழந்தைகளும், இந்த கூட்டைப் பற்றிக் கேட்கவே வேணாம். அதைப் பற்றி இவங்க என்ன சொல்றாங்கன்னு பாருங்க!
உங்கள் கருத்துகளையும் தெரியப்படுத்துங்க. நன்றி!

உனைக்கண்டு உவக்கும் உயிரிவள்

மதி மயக்கும் மதி
குளுமை குறையாத் திங்கள்
நிலம் ஒளிரச்செய்யும் நிலா
வளரும் தேயும் பிறை
புவி சுற்றும் சந்திரன்

பல பெயர்கள்
பல தோற்றங்கள்
மாறுவதில்லை  பொலிவு
தவறுவதில்லை ஈர்ப்பு
நித்தம்  கண்டாலும்
எத்துனை அழகு!

அலுப்பதில்லை அனுதினம்
அம்புலியின் அமைதி
போதவில்லைப்  பொழுதும்
பொலிவில் பொதிந்துவிட
மனதிற்கு மலர்ச்சி
மதியுடன் மௌன மொழிகள்

பயணங்களில் சில நாள்
பலகணியில் சில நாள்
தோட்டத்தில் சில நாள்
சாளரத்தில் சில நாள்
உப்பரிகையில் சில நாள்
உனைக்கண்டு உவக்கும் உயிரிவள்!



ஆனாலும் இவர் இல்லாவிட்டால்


சிறுவருக்கு விடுமுறை
பெற்றோருக்கு விடாவேலை
முழுநேரம் பார்க்கலாம் இனிமையே
சிலநேரம் வந்துவிடும் களைப்பே
வாண்டுகள் படை களிப்புற
வந்ததே பள்ளி விடுமுறை

குழுவாய் ஓடி  வருவர்
குடிக்கத் தண்ணீர் கேட்பர்
யார் கேட்டார் யார் குடித்தார்
தெளிவாகத் தெரியாது
குவளை உருளும் தண்ணீர் சிதறும்
குழுவோ காணாமல் போகும்

சிறிது நேரத்தில் திரும்பும்
சிரித்து சாமானை இறைக்கும்
இதைக் கொடு அதைக் கொடு என்றே
பூசல் பூக்கும் கலகம் கனியும்
நொடிக்கொரு முறை அழைக்கும்
நாட்டாமைப் பண்ணச் சொல்லும்

தீனி ஏதேனும் கொடுத்தால்
தோதாய் வேறு கேட்கும்
சிறிது நேரத்தில் என் தலை சுற்றும்
செவியும் பாவம் கிழியும்
ஆனாலும் இவர் இல்லாவிட்டால்
மௌனம் மனதைப் பிசையும்




'நீ குழல்' தெரியுமா?

எப்பொழுது பார்த்தாலும் போர் அடிக்கிறது, போர் அடிக்கிறது என்று ஒரே தொல்லை. இரண்டு நாட்கள் முன்பு, "நானும் என் உடன் பிறந்தவர்களும் இப்படி எங்கள் அம்மாவைத் தொந்திரவு செய்ததில்லை. அவர்களும் நான் உங்களுடன் விளையாடுவது மாதிரி விளையாடியதில்லை" என்றேன். "தொலைக்காட்சி கூட நான் கல்லூரி சேர்ந்தபின் தான் வாங்கினார் தாத்தா. நீங்கள் என்னவென்றால், டிவி, ஐபேடு, யூ டுயூப் என்று கேட்கிறீர்கள்" என்றேன். பெரியவன் பாவம் சாது, அமைதியாக இருந்தான். சிறியவன், "மதுரைல டிவி இருக்கே" என்றான். அதற்கு "இப்பொழுது இருக்கிறது, நான் உன்னை மாதிரி சிறியவளாய் இருந்தபொழுது இல்லை" என்றேன். "நீங்க இப்ப பிறந்திருக்கலாம்ல" என்றான்!!!!!

இன்று, இறைந்து கிடந்த விளையாட்டுப் பொருட்களை எடுத்து வையுங்கள் என்றேன். மீண்டும் சிறியவனே தான்..."எங்க வைக்க" என்றான் வேண்டுமென்றே. நான் "என் தலையில்" என்றேன். அதற்கு அவன், "இவ்ளோ டாய்சையும் எப்படி உன் தலைல வைக்கிறது" என்று அப்பாவியாகக் கேட்டான்.
இப்படி அவனுடைய 'திறமை' அதிகம். :)

ஒரு மகிழ்ச்சி தரும் விசயம் என்னவென்றால், "அம்மா,  'நீ குழல்' பார்க்கவா" என்றான் பெரியவன். அதென்னடா என்று கேட்டால், "யூ டுயூப்" என்றானே பார்க்கலாம்...

தமிழ்த் தாய்க்கு வேறென்ன வேண்டும் :)

உனைக் கண்ட போதில் ரோசாவே

http://alsperiscope.blogspot.in/2013/10/nature.html

கோடையில் இதம் தரும் பன்னீரோ
களைப்பில் புத்துயிர் ஓட்டும் தென்றலோ

தொடுகையில் உவகை தரும் குழவிக்கன்னமோ
உள்ளத்தில் என்ன நினைத்தாரோ

எனைத் தான் நினைத்து ஏங்கினாரோ
உனைக் கண்ட போதில் ரோசாவே

என் கூந்தல் சேர்க்கவே நினைத்தாரோ
பத்திரமாய் படமும் பிடித்தாரோ

உன் நறுமணம் எப்படிக் கொணர்ந்தாரோ
என் நாசியில் உணர வைத்தாரோ

உள்ளம் உவக்கும் படி தந்தாரோ
உள்ளம் கொண்ட என் ராசாவே



ஆனைக்கும் அடி சறுக்கும்

ஆனைக்கும் அடி சறுக்கும்
ஆதியிலே சொல்லிச் சென்றார்

தவறு செய்யும்  மனித குணம் -அது
தவறி விட்டால் யாவரும் தெய்வம்

வலியவர்க்கும் பெரியவருக்கும்
வலியாக வருமே ஏதோ ஒரு தவறு

கட்டபொம்மருக்கு ஒரு எட்டப்பன்
திப்புவிற்கும் ஒரு காவலன்

தவறு நடப்பது உண்மையில்
தவறுவது இல்லை தரணியில்

ஆனாலும் சிலர் கேட்பார்
படித்தவர் எப்படித்  தவறினார்

படித்தவர் ஏன் செத்தார்
எனவும் கேட்பாரோ மூடர்?


நானாக நான் இருத்தல்

அவளைப் போல ஆடு
இவனைப் போலப் பாடு

அவனைப் போலப் படி
இவளைப் போல விளையாடு

அவனைப் போல அது செய்
இவளைப் போல இது செய்

விளங்காமல் விழித்தக் குழந்தை
விளம்பியது  விழி விரித்து

நானாக நான் இருத்தல் எப்பொழுது
நானாக நான் இருத்தல் பிழையா?

உள்ளத்தை என் செய்வேன்

பட்டுப் போல நான் கையில் ஏந்திய என் குழந்தை
அழுவது எதற்கென்று நான் தடுமாறி கற்றக் குழந்தை

இவனுக்கு ஒரு வயதாகி விட்டதா
என்று தோன்றியது முதல் வருடம்

இவனுக்கு இத்தனை வயதாகி விட்டதா
என்று தோன்றுகிறது ஒவ்வொரு வருடமும்

பள்ளி நேரம் தவிர்த்து நான் பிரியா
என் பிரியக் குழந்தை

பள்ளி ஏற்பாடு செய்த முகாம் செல்கிறான் இன்று
பெற்றோர் இல்லாமல் தனியாக

பத்திரமாகக்  கற்றும் மகிழ்ந்தும் வா என்றேன்
என் இதயமும் உடன் சென்று உருகி நிற்கிறேன்!

இன்று மாலை எப்படிப் போகும்
இன்று இரவு எப்படி உறங்குவேன்
என்று அறியேன்

என் பிள்ளை வளர்கிறான்
என்று புரிந்தேன்!!

மூளை சொல்வதை ஏற்காத
உள்ளத்தை என் செய்வேன்!

அப்பாயி மாதிரியாம் நான்

 
படம்: நன்றி இணையம்

இன்று
நீ கடந்து சென்ற நாள்
எல்லோரும் அழுதார்கள்
நான் விழித்தேன்
அப்பாவும் தாத்தாவும்
கட்டிக்கொண்டு அழுதார்கள்
நானும் அழுதேன்
கை பிடித்து எண்ணெய் சியக்காய்
வைத்தார்கள்
கூந்தல் நீளம் என்று
முன் உச்சியில் கொண்டை போட்டார்கள்
உனக்குப் பெட்டியில் அழுத்தும் என்றோ?
மூன்றாம் நாள் பாலூற்ற
அனைவருடனும் கல்லறை வந்தேன்
எல்லோரும் செபிக்க
பேய் வருமோ என்று சுற்றும்முற்றும்
பார்த்துக் கொண்டிருந்தேன்
முதல் முறை சேலை கட்டியதிலிருந்து
தெரிந்தோர் சொல்கிறார்கள்
அப்பாயி மாதிரியாம் நான்
எனக்கு மகிழ்ச்சியே
ஆனால், பார்க்க நீயில்லையே!
ஐந்தாறு வயதில் 
நடனமாடச் சொன்னபோது நான் ஆடவில்லை 
நீ மறந்திருப்பாய்
என் திருமணம் பார்த்துச் சென்றிருக்கலாமே
என் பிள்ளைகளையும் பார்த்திருக்கலாமே
பிற பாட்டிகள் பார்க்கும் பொழுது
இப்படித் தோன்றும் எனக்கு
ஆண்டுதோறும் 
உன்னை நினைத்து
உன் அதிரச மாவையும் தான்
அன்று செய்யாத செபத்தை
இன்று செய்கிறேன்!
உன் ஆன்மா அமைதியில் இளைப்பாறட்டும்!
--உன் அன்பு பேத்தி
கிரேஸ் பிரதிபா

வரையறை



நிலம் நீர் வானம்
இக்காட்சியில்

காற்று அசையும்
இம்மூன்றில்

நெருப்பு வேண்டாம்
இக்காட்சியில்

பஞ்சபூதங்களிலும் வேண்டுமே
வரையறை!

இதுதான் காலக் கணக்கு

வைகறையில் தினமும் பாட்டன்
கைபிடித்து சென்ற முக்குக்கடை

அவருக்கு நாளிதழும் பழமும்
அவர் பேத்தி எனக்குப் பழமும்

வாங்கி மெல்ல நடந்த நடை
அதற்கு இல்லை ஈடு இணை

ஓர்நாளில் அவர் காலைக் குத்தியதே
சாலையில் கிடந்த ஓர் ஆணி

துண்டால் குருதி ஒழுக்கைக் கட்டிவிட்டு
ஒன்றுமில்லை என்றே  நடந்தார் என் கைபிடித்து

நான்காம் வகுப்பில் நான் படிக்க
ஏன் தான் கேட்டாரோ ஆசிரியர்

பாட்டன் யாருக்கு உண்டு என்று
பட்டென சொன்னேன் எனக்கு என்று

மறுநாளே வந்தது கொடுஞ்செய்தி
சென்றாரே பாட்டன் இயற்கை எய்தி

வேறெதுவும் தோன்றவில்லை எனக்கு
வெறுத்தேன் அந்த ஆசிரியரை அன்று

ஆசிரியர்மேல் தப்பில்லை வளர்ந்தபின் புரிந்தது
ஆண்டுபல ஆனாலும் பாட்டன் நினைவு அழியாதது

சாலையும் இருக்கே ஆணியும் இருக்கே
பாட்டன் இல்லையே இன்று

இதுதான் காலக் கணக்கு
அதுதான் பிடிக்கவில்லை எனக்கு 

இன்றும் வந்தான் அவன்

இன்றும் வந்தான் அவன்
என் உணர்வுகளைத் தட்டிச் செல்ல
என் மனக் கதவுகளைத் திறந்திட
என்னை ஒரு நிமிடமேனும் சிலையாக்கிட
என்னை, என்னை மறக்க வைத்திட
கொண்டல் மகனவன், மழை என்பவன்!
என்னை எப்பொழுதும் மகிழ்விப்பவன்
இன்றும் வந்தான் அவன்!

மகள், மருமகள் - இரண்டு பார்வை

"நீ செய்வ...என் பொண்ணு செய்ய மாட்டா" என்று தன் மாமியார் சொன்னதும் அமலாவிற்கு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை. "நீ செய்வ.." அவள் காதில் எதிரொலித்துக் கொண்டே இருந்தது. மதிய உணவிற்கு டப்பாவில் கட்டிக்கொண்டு விரைந்து சென்று பேருந்தில் ஏறினாள். பேருந்து முன்னே செல்ல அவள் மன உந்து பின்னே சென்றது.

"அம்மா, காபி" என்ற அமலாவிற்கு காபி கலந்து கொடுத்த அம்மா கூடவே இரண்டு வடையும் கொண்டு வந்தாள். "சாப்பிட்டு விட்டு படி அமலா, சிறிது நேரம் கழித்து சாப்பாடு வைக்கிறேன்", என்றபடியே போனாள். படிப்பில் மூழ்கிய அமலா அம்மா வந்து காலி குவளையை எடுத்துச் செல்லும்பொழுது சிறு புன்னகையொன்றை தந்து விட்டு படிப்பைத் தொடர்ந்தாள்.
...

அன்று விடுமுறை,  நாவல் ஒன்றைப் படித்துக் கொண்டிருந்த அமலாவிற்கு "விடுமுறை தினத்திலாவது வீட்டைப் பெருக்கினால் என்ன?" என்று சொல்லிக்கொண்டே அம்மா வீட்டைப் பெருக்கியது தெரியவில்லை.
...

கல்லூரி முடிந்து மூன்று மணிக்கு வீடு திரும்பிய அமலா அம்மா அசதியாக படுத்திருப்பதைப் பார்த்துவிட்டு பூனை போல அடுமனையில் நுழைந்தாள். சத்தம் வரக்கூடாதே என்று சிரத்தை எடுத்து மெதுவாக இரண்டு கோப்பைகளைக் கழுவியிருப்பாள். அம்மா வந்துவிட்டாள்! உடம்பின் தொப்புள் கொடி தான் அறுக்கப்பட்டது போல, மனதிலும் ஒரு கொடி இணைப்பு இருக்கும் போல என்று எண்ணினாள் அமலா. பிறகு எப்படி அம்மா எழுந்து வந்தாள்? "அமலா, விடு நான் கழுவிக் கொள்கிறேன்" என்று வலுக்கட்டாயமாக அனுப்பி விட்டாள். பிறகு என்ன? அமலா, நாவல், அமலா!

ஒரு குழியில் ஏறி இறங்கிய பேருந்து அமலாவை நிகழ்காலத்திற்கு கொண்டுவந்தது. இன்றைய நிகழ்ச்சியையும் கண் முன் கொண்டு வந்தது.

காலையில் ஐந்து மணிக்கு எழுந்து சமையலை ஆரம்பித்து காலை உணவு, மதிய உணவு என்று எல்லாம் செய்து முடித்தாள். நேற்று  வீட்டு வேலை செய்யும் வேணி வந்து, "அக்கா, பண்டிகைக்கு ஊருக்குப் போகணும், நான்கு நாட்கள் விடுப்பு வேண்டும்", என்றாள். அமலாவும், "போய்  விட்டு சரியாக வந்து விடு வேணி" என்று சொல்லி அனுப்பிவிட்டாள். அதனால் அவசர அவசரமாக பாத்திரங்களைத் துலக்கிவிட்டு வீட்டையும் பெருக்கிய அமலா தன் நாத்தனார் இன்னும் உறங்கிக்கொண்டிருந்ததால் அத்தையிடம், "அத்தை, இந்த அறை மட்டும் பெருக்கவில்லை, நான் அலுவலகம் கிளம்புகிறேன், .." என்று சொல்வதற்குள் இடைமறித்த அவள் மாமியார், "அமலா, வீட்டுவேலை எல்லாம்  நீ செய்வ..என் பொண்ணு செய்ய மாட்டா, செல்லமா வளந்த பொண்ணு, அவளுக்குப் பழக்கமில்ல, அதனால் மாலை வந்து நீயே செய், அவ எதுவும் ஒத்தாசை செய்வான்னு நெனச்சுடாத!" என்று சொல்லிவிட்டு நாளிதழுடன் சென்று உறங்கிக் கொண்டிருந்த மகள் அருகில் அமர்ந்து வாசிக்கத் தொடங்கிவிட்டாள்.

அமலா விக்கித்து நின்றாள். எனக்கும் பழக்கமில்லையே, நானும் செல்லமாகத் தானே வளர்ந்தேன். இந்த வேலையெல்லாம் திருமணத்திற்குப் பின் இரண்டு வாரங்கள் தானே செய்தாள்..அதுவும், வேலைக்காரி அமையும் வரைக்கும், நம் வீடு நாம் செய்வோம் என்று தானே செய்தாள்? விடுமுறை முடிந்து இங்கு வருவதற்கு முன்னும் ஊரில் மாமியார் வீட்டில் யதார்த்தமாக உதவி செய்யலாம் என்று சில வேலைகள் செய்தாள். ஆனால் அதுவெல்லாம் நல்ல பெயர் எதுவும் சேர்க்கவில்லை போலவே...தான் ஏதோ வேலைக்காரி என்றும் தன் மகள் செல்லப்பெண் என்றும் மாமியார் பேசுவதைக் கேட்டால்....

வேலை செய்வது அமலாவை சிறிதும் வருத்தவில்லை, அது தன்  வீடு. ஆனால் மாமியாரின் எண்ணம்?  மகளுக்கு ஒரு பார்வையும் மருமகளுக்கு ஒரு பார்வையும் இருக்குமா? தன்னைச் செல்லமாக வளர்த்த அம்மாவிற்கு தெரிந்தால் என்ன செய்வாள்?

தன் நிறுத்தம் வந்ததை உணர்ந்து இறங்கிய அமலாவின் மனம் பட்ட பாடு யாருக்குப் புரியும்?

இவன் மேல் எனக்கு காதலா?

தினமும் என்னை அழவைத்தாலும்
கண்கள் சிவக்க வைத்தாலும்
தினமும்...ஏன்
தினத்தில் பலமுறையும்
இவனை நாடிச் செல்கின்றேனே
இவன் மேல் எனக்குக்  காதலா?







இயன்றவரிடம் இயன்றதைக் கேட்பதுவும்

திருமணத்திற்கு
இதைச் செய் அதை வாங்கு என்று
இல்லாதவரிடம் இல்லாததைக்  கேட்பது மட்டுமா
வரதட்சிணை?
இயன்றவரிடம் இயன்றதைக்  கேட்பதுவும்
வரதட்சிணையே!!

இருமன பந்தத்திற்கு ஒத்த மனமும்
இறுதிவரை காந்தமாக ஈர்க்கும் அன்பும்
இன்றியமையாதவை
இவை அல்லாமல் வேறெதுவும் அனாவசியமே
இதை உணர்ந்து கேட்பதை விடுத்திடுவோம்
இனிதாய் இணைந்து பண்பாய் வாழ்ந்திடுவோம்!!


வழி மேல் மைகலைந்த விழிவைத்து

வெரு இன்றி தெவ்வர் முனை சென்ற தலைவன்
பருவரல் தன்னை அணுகாமல் வருவான் வெற்றியுடன்

என்றே நறு மாலை கையில் ஏந்தி
நன்றே வரவேற்றிட சிந்தையில் மயங்கி

வழி மேல் மைகலைந்த விழிவைத்து மெல்லிய
வளி கலைக்கும் கூந்தலை செவியின்பின் செருகிய

ஒண் தொடி அணிந்த மடந்தையின் குவளைக்
கண் இரண்டும் ஒளி பெற வருவானா வீரன் அவன்?

சங்க இலக்கியக் காட்சி மட்டுமா இது?
என்றும் நாட்டில் இயைந்த காட்சி இது!

முனை சென்ற தலைவனும் காத்திருக்கும் தலைவியும்
இருப்பதாலேயே
இருப்பதனால் மட்டுமே
சுனை போல கவி பாடிக்கொடிருக்கிறோம் நாம்!


எல்லை காக்கும் வீரர் அனைவருக்கும் இக்கவிதை அர்ப்பணம்!

சொற்பொருள்: வெரு - அச்சம், தெவ்வர் - பகைவர், முனை - போர்முனை,பகைவர் இடம், பருவரல் - துன்பம், நறு - நறுமணம், வளி - காற்று, ஒண் தோடி - ஒளிவீசும் வளையல், சுனை - ஊற்று 

நாளைய சமுதாயம் நம் கையில்???!!!!

பலமுறை கேட்டிருக்கிறேன்
நாளைய சமுதாயம் நம் கையில்
என்று

பலமுறை பார்த்திருக்கிறேன்
அது உருவாகும் விதம் எப்படி
என்று

வரிசையில் நிற்கும் ஒரு பிள்ளை
புறக்கணித்து முன்னே செல்
என்னும் 'பெரியவர்'

இருவருக்கு ஒரு சீட்டு வாங்கி
கூட்டத்தைப் பயன்படுத்தி இராட்டினத்தில்
ஏற்றும் 'திறமைசாலி'

உயரம் வரைமுறை ஓர் விளையாட்டிற்கு
'பெரியவர்' ஆலோசனையில் எக்கிநின்று
உள்நுழையும் 'வெற்றிவீரன்'

எக்கி நிற்பதைப் பார்த்தொருவன் தடுத்திட்டால்
பார்த்துட்டானே  'சனியன்' அவன் நகரட்டும்
தொடரும் 'விடாமுயற்சி'

உல்லாசப் பயணத்திற்கு விடுமுறை எடுத்துவிட்டு
'வயிற்றுப் போக்கு' என்று சொல்லிவிடு
சிறந்த வழிகாட்டும் பெற்றோர்

பொம்பிளப் பிள்ளைக்கு எவ்வளவு திமிர்
தள்ளி விட்டுட்டு ஓடுடா
விதைக்கப்படும் 'நல்ல' விதை

இப்படிப் பல வார்ப்புகள்
எப்படி மாறும் ஏக்கங்கள்
நாளைய சமுதாயம் நம் கையில்!!!!

ஐங்குறுநூறு 12 - கரும்பைப் போன்ற நாணல்

ஐங்குறுநூறு 12 
பாடியவர் ஓரம்போகியார்
மருதம் திணை - தலைவி தோழியிடம் சொன்னது 

"கரை சேர் வேழம் கரும்பில் பூக்கும்
துறை கேழ் ஊரன் கொடுமை நன்றும்
ஆற்றுக தில்ல யாமே
தோற்கதில்ல என் தட மென் தோளே"

எளிய உரை: கரையில் வளரும் நாணல் கரும்பைப் போல வளரும் அழகிய நீர்நிலைகளை உடைய ஊரைச் சேர்ந்தவனுடைய கொடுமையை பொறுக்க முடியவில்லை எனக்கு. என் வளைந்த மெல்லிய தோள்கள் தோற்பதில்லை.

விளக்கம்: நீர்நிலைகளின் கரையில் நாணல் செடிகள் கரும்பைப் போல வளர்ந்திருக்கும் ஊரைச் சேர்ந்த தலைவன் பிரிந்து சென்றதை நினைத்து வருந்தும் தலைவி தலைவனுடைய அக்கொடுமையை பொறுத்துக்கொள்ள முடியவில்லை என்கிறாள் தோழியிடம். தன் வளைந்த மெல்லிய தோள்கள் தோற்பதில்லை என்றும் சொல்கிறாள்.

சொற்பொருள்: கரை சேர் வேழம் - கரையில் வளரும் நாணல் செடி, கரும்பில் பூக்கும் - கரும்பைப் போல வளரும், துறை கேழ் ஊரன் - அழகிய நீர்நிலைகளை உடைய ஊரைச் சேர்ந்தவன், கொடுமை நன்றும் ஆற்றுக தில்லை யாமே - கொடுமையை பொறுக்கமுடியவில்லை நானே, தோற்கதில்ல என் தட மென் தோளே - தோற்பதில்லை என் வளைந்த மெல்லிய தோளே 

என் பாடல்:
கரும்பைப் போல நாணல் வளர்ந்திருக்கும் 
அழகிய ஊரைச் சேர்ந்தவன் கொடுமை 
பொறுக்க முடியவில்லை எனக்கு 
தோற்றுப் போவதில்லை வளைந்த என் மெல்லிய தோளே 

அக்கினிக் குஞ்சொன்று எங்கே வைக்க

புலியை முறத்தால் அடித்து விரட்டலாம்
பசுத்தோல் போர்த்திய புலியை?

உச்சி மீது வானிடிந்து வீழுகின்ற போதிலும்
அச்சமில்லை அச்சமில்லை என்று கற்றது ஏட்டுச் சுரைக்காயா?

அநியாயத்தை தட்டிக் கேட்க அஞ்சி
ஏற்றுச் செல்வதே உண்மை நிலையா?

மனம் வெறுத்து அற்றுப் போகிறதே
பாரதியையும் அவ்வையாரையும் கற்பிக்க

நீதி நூல்கள் அத்தனை இருக்க
அதற்கு மேலும் அநியாயங்கள் இருக்கே

பொங்கும் உள்ளத்தை மற்றவர் அறிவுரைபடி
அப்படித்தான் என்று அடக்க முடியவில்லையே

நான் தவறா சமுதாயப் போக்கு தவறா
அக்கினிக் குஞ்சொன்று எங்கே வைக்க

பாரதியே வாராயோ
குழப்பத்தை தீராயோ....



உன் வாசம் நுகர்ந்தவுடன்

புதிதல்ல என்றாலும்
உன் ஓசை கேட்டவுடன்
துள்ளும் என் உள்ளம்

பழகியதே என்றாலும்
உன்னைப் பார்த்தவுடன்
மகிழும் என் கண்கள்

புதிதல்ல என்றாலும்
உன் தழுவல் உணர்ந்தவுடன்
சிலிர்க்கும் என் தேகம்

பழகியதே என்றாலும்
உன் வாசம் நுகர்ந்தவுடன்
உயிர்க்கும் என் அணுக்கள்

பழகிய மழையே
நீ என்றும் அழகே
எப்பொழுதும் இனிமையே !

என் செய்வான் இருந்தால் ...

தேசியக்கவி பாரதி அவன்
பேசியமொழி இனியமொழி

கவி படைத்தான் கன்னித் தமிழில்
புவி மறைந்தாலும் வாழ்வான் புகழில்

தொலை நோக்கிப் பார்த்தான்
பெண்ணடிமைச்  சாடினான்

விடுதலை உணர்வை ஊட்டினான்
சமுதாயச் சிறுமை சாடினான்

எதைப் பாடவில்லை அவன்
எளியக் கவிபடைத்த உன்னதன்

பன்மொழிப் பாவலன் ஆனால்
தமிழ் மொழிக் காதலன்

அவன் இன்று இல்லை இப்புவியில்
என் செய்வான்  இருந்தால்

இன்றும்! இன்றும்  நிலை கெட்டே
இருக்கும் மானிடரைப் பார்த்து!!!

தமிழே உதவ மாட்டாயா

நெஞ்சம் எல்லாம் நிறைந்திட்டான்
கொஞ்சம் பேச மறுக்கிறான்

தெரிந்து கொள்ள சில கேள்விகளும்
புரிந்து கொள்ளடா  என்று சில கேள்விகளும்

கடமையாய் கேட்டுவிட்டு பாவம்
மடமையாய் விழிக்கிறது உள்ளம்

பதிலை அறியவா கேட்டேன்
காதலை அறிவிக்கத்  தவிக்கிறேன்

புரிந்து தான் கொண்டானா?
புரியாதது போல நடிக்கிறானா?

அலைநுரையில் பந்தொன்று செய்து
தலையில் பட்டென்று போடவா?

மயிலிறகு கொண்டு வந்து
கன்னத்தில் இரண்டு போடவா?

சினம் எரிமலையாய்ப் பொங்கி
தேனாய் வழிகிறதே என்ன விந்தை

எண்ணம் பலவிதமாய் தோன்றி
அவனையேச் சுற்றுகிறதே சிந்தை

தமிழே உதவ மாட்டாயா
கவியாய் காதலைச் சொல்வாயா


இலை பல வடிவில்


இலை இல்லை என்றால் 
கலை இல்லை உலகில் 
இலை தனியில் திரளில் 
இலை பல வடிவில் 


வீட்டில் போரடிக்கிறது என்று தொந்திரவு செய்த மகனை அழைத்துக் கொண்டு சிறிது தூரம் நடந்தேன். பத்தே அடியில் பல இலைகளைக் காட்டினேன். சிலவற்றைச் சேகரித்துக்கொண்ட அவன் வீட்டிற்குச் சென்று அதை வைத்து கைவேலை செய்யலாம் என்றான். உடனே வீடு வந்து நாங்கள் செய்ததுதான் படத்தில் உள்ளது. இலை மாதிரி வடிவம் வரைந்து "Leaves Show" என்று எழுதினான். பிறகு எங்கு சொன்னானோ அங்கு பசை போட்டேன், அவன் இலைகளை ஓட்டினான்.

அவன் மிகவும் ரசித்த தொட்டாச்சிணுங்கி இலை அவன் கொண்டுவரவில்லை, அதுதான் சுருங்கிக்கொண்டு விட்டதே. அது ஏன் அப்படி மூடிக்கொள்கிறது என்று என்னைத் துளைத்து விட்டான். அதன் அசைவைப் பார்த்து எந்த மிருகமும் பயந்துகொண்டு சாப்பிடாது, அதனால் என்றேன். உடனே அவன், "நான் ஒன்றும் செய்யமாட்டேன்" என்று சொல்லிக்கொண்டே தொட்டான். கேட்குமா அச்செடி? சுருங்கிக்கொண்டது. ஏன்? ஏன்? என்று நூறு கேள்வி கேட்டவனை சீக்கிரம் கைவேலை செய்யலாம் வா என்று அழைத்துக் கொண்டு வந்து விட்டேன். :) அவன் தயவில் எனக்கு ஒரு கவிதை வந்தது! ஒரு நடையில் இரண்டு மாங்காய் :)

ஆசிரியர் தினம்

வீட்டில் சில பள்ளியில் பல
குழந்தைகள் ஆசிரியர்களுக்கு

வார்த்தைகள் சில நன்றி பல
அவர்தம் பணிக்கு

நாட்கள் பல அதனில் ஒன்றே
முக்கியமாக ஆசிரியர்களுக்கு

வணக்கம் வரையில மதிப்பு மிக
வாழ்த்துகள் ஆசிரியர்களுக்கு

நினைக்க சர்வபள்ளி ராதாகிருட்டிணன்
முன்னாள் குடியரசு தலைவர்
தத்துவ மேதை, ஆசிரியர்

அவர் பிறந்த நாளை
ஆக்கினார் ஆசிரியர் தினம்
நன்றிகூற சிறப்பிக்க

ஆசிரியர் தினம்
ஆசிரியருக்கு ஒரு வாழ்த்து, இனிப்பு
அதுவல்ல சிறப்பு

காரணம் அறிந்து
வரலாறு தெரிந்து
போற்றுவோம் கொண்டாடுவோம்

அனைத்து ஆசிரியருக்கும் ஆசிரியர் தின வாழ்த்துகள்!

ஐங்குறுநூறு 11 - தோள் காட்டிக்கொடுக்கிறதே...

ஐங்குறுநூறு 11, பாடியவர் ஓரம்போகியார்
மருதம் திணை - தலைவி தோழியிடம் சொன்னது

"மனை நடு வயலை வேழம் சுற்றும்
துறை கேழ் ஊரன் கொடுமை நாணி
நல்லன் என்றும் யாமே
அல்லன் என்னும் என் தட மென் தோளே"


எளிய உரை:  மனையில் நடப்பட்ட பசலைக் கீரை படரும், அழகிய நீர்நிலை உள்ள ஊரைச் சேர்ந்தவனுடைய கொடுமையை நாணி நல்லவன் என்றே சொல்கிறேன். அல்ல என்கிறது என்னுடைய அகன்ற மெல்லிய தோள்கள்.

விளக்கம்:  தலைவியை விட்டு பிரிந்து சென்ற தலைவனுடைய கொடுமையை எண்ணி வருந்தி நாணினாலும் அவன் நல்லவன் என்றே சொல்கிறாள் தலைவி. ஆனால் அவளுடை அகன்ற மெலிந்த தோள்கள் தலைவன் நல்லவன் இல்லை என்று சொல்கின்றன என்று சொல்கிறாள் தலைவி. வருத்தத்தில் தோள்  மெலிந்ததை அவ்வாறு சொல்கிறாள் போலும்.

சொற்பொருள்:  மனை நடு வயலை வேழம் சுற்றும் -  வீட்டில் வளர்க்கப்பட்ட பசலைக்கீரை படரும் (வயலை - பசலை), துறை கேழ் ஊரன் - அழகிய கரைகளைக் கொண்ட ஊரைச் சேர்ந்தவன், கொடுமை நாணி - கொடுமையை எண்ணி நாணி, நல்லன் என்றும் யாமே - நல்லவன் என்கிறேன் நானே, அல்லன் என்னும் - நல்லவன் இல்லை என்று சொல்லும், என் தடமென் தோளே - என்னுடைய அகன்று  மெலிந்த தோள்கள், தட - அகன்ற, பெரிய, வளைந்த என்று மூன்று பொருள் தரும் 

என் பாடல்:
வீட்டில் நடப்பட்ட பசலைக்கொடி சுற்றும் 
அழகிய கரைகள்  இருக்கும் ஊரைச் சேர்ந்தவன் 
என்னைப் பிரிந்து சென்றதை எண்ணி நாணினாலும் 
நல்லவன் என்றே சொல்கிறேன் 
என்னுடைய மெலிந்த தோள்கள் இல்லை என்று பறைசாற்றுகின்றனவே 

பாட்டன் காட்டைத் தேடி - இன்னுமொரு சிறுத்தை

ஜெய்பூரில் ஹெரிடேஜ் ஹோட்டல் ஒன்றில் தவித்த சிறுத்தை! பாவம் தன் இடத்தைக் காணாமல் குழம்பித் தவித்திருக்கிறது. பல ஆண்டுகளுக்கு முன்பு பெங்களூரி...